25 தயாரிப்பாளர்கள் தவிர்த்த கதை : வெற்றிக்கு பின் பலரும் அழைக்கும் நிலை

இயக்குனர் வெற்றிமாறனிடம் ‛வட சென்னை, அசுரன்' போன்ற படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் தமிழ். ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான மிரட்டும் போலீஸ் ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவர், இயக்கி தற்போது ஒடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள படம் டாணாக்காரன். விக்ரம் பிரபு, அஞ்சலி நாயல், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். போலீஸ் பயிற்சி மையத்தில் நடக்கும் அவலங்களை பற்றி இந்த படம் பேசியது.

இந்த படத்தின் கதையை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்துள்ளார் தமிழ். சென்னை, தாம்பரத்தில் போலீஸ் பணி செய்த இவர், சினிமா ஆசையால் வெற்றியிடம் சேர்ந்துள்ளார். தன் கவனம் முழுக்க இயக்கத்திலேயே இருந்தது. இந்த கதையை தயார் செய்து கிட்டத்தட்ட 25 தயாரிப்பாளர்களிடம் சொல்லி உள்ளார், பலரும் நிராகரித்துள்ளனர். 2 பிரெட், 2 சண்டை காட்சி வைத்து எப்படி படம் எடுப்பாய் என கேட்டுள்ளனர்.

இறுதியாக பொட்டன்சியல் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மட்டும் இந்த கதையில் நம்பிக்கை வைத்து படத்தை எடுத்து, நல்ல விலைக்கு விற்று லாபமும் பார்த்துள்ளார். அதுமட்டுமல்ல இயக்குனர் தமிழின் அடுத்த படத்தையும் தனது நிறுவனத்திலேயே தயாரிக்க முன் வந்துள்ளார் பிரபு. இவர் தவிர்த்து பல தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுக்கு படம் பண்ண சொல்லி தமிழிடம் கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.