இந்தியா-அமெரிக்கா அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை ; விண்வெளி ஆய்வு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா- அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தையின் போது விண்வெளி ஆய்வு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அணுசக்தி சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பு ஆகியவற்றில் இந்தியா இடம்பெற அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விண்வெளி ஆய்வுகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து அறிவித்துள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அமெரிக்க அமைச்சர்கள் ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள வேறுபாடுகளை குறித்து விவாதித்ததாகவும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏன் உக்ரைன் மீதான போரைக் கண்டிக்கவில்லை என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியா நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து ரஷ்யாவை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா செய்த உதவிகளையும் ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார்.

இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அணுசக்தி சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பு ஆகியவற்றில் இந்தியா இடம்பெற அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.