எங்களைச் சொல்றீங்களே.. நீங்க சீக்கியர்களைத் தாக்கலாமா?.. அமெரிக்காவை வெளுத்த இந்தியா!

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து விட்டதாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இரு சீக்கியர்கள் மீதான தாக்குதலை சுட்டிக் காட்டி, அமெரிக்கா இதுகுறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது இந்தியா.

அமெரிக்காவில் நடந்த இந்தியா – அமெரிக்கா இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாட்டு அமைச்சர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேசுகையில், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டுதான் உள்ளதாக கூறினார்.

அந்த சமயத்தில் அதுகுறித்து இந்திய வெளியுறவு
அமைச்சர் ஜெய்சங்கர்
எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நியூயார்க்
நகரில் இரண்டு சீக்கியர்கள் மீது நடந்துள்ள இனவெறித் தாக்குதல் அங்குள்ள இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது அந்த
சீக்கியர்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது. குறிப்பாக சீக்கியர்கள் மீதுதான் அடிக்கடி தாக்குதல் நடைபெறும். கடந்த ஜனவரி மாதம் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில், ஒரு சீக்கிய டாக்சி டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. டர்பன் கட்டியவனே உனது நாட்டுக்குத் திரும்பிப் போ என்று கூறி அந்த டிரைவர் தாக்கப்பட்டார்.

சமீபத்திய நியூயார்க் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நியூயார்க் மாகாண சட்டசபை எம்பியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான ஜெனிபர் ராஜ்குமார் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெறும் துவேஷத் தாக்குதல்கள் 200 சதவீதம் அதிகரித்து விட்டதாக கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து தனது கருத்துக்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவின் கொள்கைகள் குறித்து கருத்துக் கூற பிற நாடுகளுக்கு உரிமை இருந்தால், அதே அளவிலான உரிமை, இந்தியாவுக்கும் உண்டு.

அமைச்சர் பிளிங்கனின் கருத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். இந்தியாவில் உள்ள நிலவரம் குறித்து அவர் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இப்போது அமெரிக்காவில் 2 சீக்கியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நடந்த அமைச்சர்கள் அளவிலான சந்திப்பின்போது மனித உரிமை மீறல் குறித்து விவாதிக்கவில்லை.

மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கூட கவலைகள் உண்டு. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும்போது அதுகுறித்து இந்தியாவும் கவலைப்படும். இப்போது கூட 2 சீக்கியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றார் ஜெய்சங்கர்.

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக சில மாநிலங்களில் தாக்குதல் நடந்து வருவதாக அமெரிக்க பிரதிநிதிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளனர். அதை மனதில் வைத்தே பிளிங்கன் இப்படிப் பேசியிருந்தார். அதற்கு தற்போது ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.