கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பால் நகருக்குள் நுழையும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்தன. மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சித்திரை தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி, வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களாக உள்ளது. இதையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் தங்கள் வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கினர். நேற்று காலை கொடைக்கானலின் நுழைவுபகுதியான வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்தன. தமிழகத்தின் பிறபகுதிகள் மட்டுமின்றி கேரளா. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்த அதிக வாகனங்கள் காணப்பட்டன.
கொடைக்கானல் டோல்கேட்டை கடக்க வாகனங்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தன. இதனால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மலைச்சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாபயணிகள் உரிய நேரத்தில் தங்கள் அறை மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
தொடர் விடுமுறை என்பதால் மேலும் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் போலீஸாரை பணியில் அமர்த்தி சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாபயணிகளிடம் உள்ளது.