மதரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து, அமைதியை காக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்சினையை தூண்டி விடுகின்றனர் என்றும், நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையை கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டின் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் அமைதியாக இருப்பது கவலை அளிப்பதாகவும், அதிர்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள 13 எதிர்க்கட்சிகள், இந்தியாவின் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்த உறுதி எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமுதாயத்தைப் பிளவு படுத்தும் நச்சு கருத்துக்களை எதிர்த்து, ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவோம் என்று, 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுதி எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.