மதுரை சித்திரைத் திருவிழாவில் 7 இடங்களில் மோதல்: அரசு பஸ், 2 ஆட்டோக்கள் சேதம்

மதுரை: சித்திரைத் திருவிழாவில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 7 இடங்களில் மோதல் நடந்தன. ஒரு அரசு பஸ், 2 ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன.

சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கள்ளழகரை பார்க்க, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், மதுரை சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். அப்போது மோதல்கள் ஏற்படுவதை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் போலீஸார் நேரடியாகவும், சீருடை இல்லாமலும், கண்காணிப்பு காமிராக்கள் மூலமாகவும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த முறை ‘ட்ரோன்’ காமிராக்களைக் கொண்டும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று மூன்று மாவடியில் எதிர்சேவையில் கள்ளழகர் மாலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் அருகேயும், இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகேயும் வந்தார். அந்தப் பகுதிகளில் அதிகமான மக்கள் கூட்டமாக திரண்டிருந்தனர். அப்போது முதல் போலீஸார், கூட்டத்தை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செய்தனர். இளைஞர்கள், கூட்டம் கூட்டமாக ஆட்டம், பாட்டத்துடன் பங்கேற்றனர். அவர்களில் பலர் மது அருந்தியும், கைகளில் சில ஆயுதங்களை வெளிப்படையாக வைத்துக் கொண்டு கூட்டத்தில் வலம் வந்தனர். போலீஸார் கண்காணிப்பு காமிராக்கள் மூலமும், நேரடியாக பார்த்தும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

திருவிழாவில் இளைஞர்களுக்கு இடையே ஜாலியாக ஆரம்பித்த சத்தம் சில இடங்களில் வார்த்தை மோதல், வாக்குவாதம் என்று மாறி ஒரு கட்டத்தில் தகராறு ஏற்பட காரணமானது. அதிகாலை 5 மணி வரை பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இரண்டு ஆட்டோக்கள், ஒரு அரசு பஸ் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. 7 இடங்களில் இரு பிரிவாக இளைஞர்கள் மோதிக் கொண்டனர். இரண்டு இடங்களில் கத்திகுத்து சம்பவங்கள் நடந்தன. தல்லாக்குளம் பகுதியில் போலீஸாரையே கத்தியால் குத்த முயன்ற சம்பவமும், எதிர்த்து அடிக்க முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அவசர எண் 100 அழைப்பில் நேற்று 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 30 வன்முறைகள் தொடர்பான அழைப்புகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக போலீஸார் சில வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘இதுவரை நடந்த சித்திரைத் திருவிழாவில் இந்தமுறை போல் பெரிய தகராறுகள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த காலத்தில் சில இடங்களில் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து சென்று விடுவா்கள். ஆனால் இந்த முறை இளைஞர்கள் ஆக்ரோஷமாக கலந்து கொண்டனர். அவர்கள் கூட்டம், கூட்டமாக சென்று யாரையாவது வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே சென்றனர். கண்காணிப்பு அதிக அளவில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட்டன ’’என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.