முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்? – எடப்பாடி பழனிசாமி..!!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது  கடும் தாக்குதல் நடத்தி  உள்ளனர்.  

தமிழ்நாட்டிலேயே, தமிழ்நாடு ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழ்நாட்டிற்குள்ளேயே தமிழ்நாடு ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு  சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாடு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு  பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.  

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு  அடைவதை அஇஅதிமுக ஒருபோதும்  ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான  கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

தமிழ்நாடு ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்?” என்று கூறப்பட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.