ஆக்கிரமிப்பு புகார்; 35 வருடமாக சாஸ்தா யுனிவெர்சிடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-ஐகோர்ட்

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து, நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வின்முன் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு ஒதுக்கிய நிலத்திற்கு மாற்றாக மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை மாற்று இடமாக வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தும், அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார்.
image
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, கட்டடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழக தரப்பு கூறுவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 30 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கட்டுமானங்களுக்கு ஏன் அனுமதி கொடுத்தார்கள்? இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ஆக்கிரமிப்பாளர் மட்டுமன்றி அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார். அதற்கு அரசு தரப்பில், இந்த பிரச்னை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
image
இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளன என்று தெரிவித்த நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகளில், ஆக்கிரமிப்புக்கு எதிராக அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் வகையில் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை திங்கள்கிழமை தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.