கொல்கத்தாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர்களால் நடத்தப்படும் உணவகம்

கொல்கத்தா: இணையளதளங்களில் சுவாரஸ்யமான செய்திகள் பல கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பல, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளன.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உணவகங்கள் பல உள்ளன. டெல்லியில், ‘எக்கோஸ்’ என்ற உணவகம், காது கேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடு உடையவர்களால் நடத்தப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் மும்பையில் திருநங்கைகளால் நடத்தப்படும் ஒரு உணவகமும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

தற்போது கொல்கத்தாவில் ஒருஉணவகம், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 7 நபர்களால் நடத்தப்படுவது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இதன் பெயரே ‘கஃபே பாசிட்டிவ்’. இந்த உணகவத்தை டாக்டர் கலோல் கோஷ் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜோத்பூர் பார்க் பகுதியில் 100 சதுர அடி இடத்தில் தொடங்கினார். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததால், சமீபத்தில் இந்த உணவகம், பாலிகஞ்ச் பகுதியில் மிகப் பெரிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எச்ஐவி பற்றிய தவறான எண்ணத்தை போக்கவும், எச்ஐவி பாதிப்பு நபர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. இங்கு காபி, மீன், சிப்ஸ், சாண்ட்விச் மற்றும் பாஸ்தா போன்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

‘கஃபே பாசிட்டிவ்’ குறித்து அதன் உரிமையாளர் டாக்டர் கலோல் கோஷ் கூறியதாவது: ஆசியாவில், எச்ஐவி நபர்களால் நடத்தப்படும் முதல் உணவகம் இது. எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்காக நான் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறேன். இந்த உணவகத்துக்கு வர சிலர் தயங்கினாலும், ‘இங்கு வருவதால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என பல வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இங்கு வரும் இளைஞர்கள் முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.