#திருவண்ணாமலை || மறுமணத்தின் போது இளம்பெண் ஓட்டம் – போலீசார் விசாரணை.!

ஆரணி அருகே கணவனை பிரிந்து வாழ்ந்த இளம் பெண்ணுக்கு, மீண்டும் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புதுகாமூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து உள்ளது. தனது கணவருடன் சில நாட்கள் இருந்துவிட்டு பின்னர், வாழப் பிடிக்காமல் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்த பெற்றோர்கள், அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, இன்று எஸ்.வி.நகரம் கிராமத்திலுள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று கடைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற அந்த இளம்பெண், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அந்த இளம்பெண்ணை பல இடங்களிலும் தேடி அலைந்தனர்.

எங்கு தேடியும் கிடைக்காததை அடுத்து, ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து மணமகனை பிடிக்காததால் இந்த இளம்பெண் ஓட்டம் பிடித்தாரா? அல்லது வேறு வாலிபருடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? முன்னாள் கணவருடன் வாழ்வதற்காக சென்று விட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.