சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மானியக்கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
இங்கே அ.தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர் அருண்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர் உதயநிதி மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பேசி, அதையொட்டி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைப்புகளுடைய நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன; என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம்; அதனால் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் என்ன; இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும்; படிப்படியாக அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.