தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக பயனாளர்கள் யாரும் பயனடையவில்லை என்றும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்… `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என மாற்றி அமைக்கப்படுகிறது என தமிழக பட்ஜெட் 2022-ல் தமிழக அரசு தெரிவித்தது. அரசின் இந்த முடிவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், “தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “2018-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தை அ.தி.மு.க அரசுதான் கிடப்பில் போட்டது. நீங்கள் விட்டுச்சென்ற 3 லட்சத்து 59 ஆயிரத்து 455 பயனாளிகளுக்குத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றாலும் அரசுக்கு 4,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும்” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தது காரணமாகவும், திட்டத்துக்கான டெண்டரை எடுக்க யாரும் முன்வராததாலும் தான் திட்டம் காலதாமதமானது. இந்தத் திட்டம் மோசமான திட்டம் அல்ல” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், “தங்கம் வழங்கும் திட்டத்தை மோசம் என்று கூறவில்லை. திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. திட்டம் முறையான நபர்களுக்குச் சென்று சேரவில்லை. குறைபாடுகளைப் புரிந்து கொண்டு… அறிந்து கொண்டுதான் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “எதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதோ அந்த பயன் பயனாளிகளை சென்றடையவில்லை. திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்தும் தங்கம் பயனாளிகளை சென்றடையவில்லை. மேலும், தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு கல்வித்தகுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சியில் படிக்கும்போதே நிதி வழங்கப்படுவதால் அந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.