ரயிலை ஒரு நிமிடம் தாமதமாக இயக்கியதற்காக சம்பளத்தை பிடித்தது செல்லாது: ஜப்பான் ஓட்டுநர் வழக்கில் தீர்ப்பு

டோக்கியோ: ரயிலை 1 நிமிடம் தாமதமாக இயக்கியதற்காக சம்பளக் குறைப்பை சந்தித்த ஜப்பான் ரயில் ஓட்டுநர் தொடர்ந்த வழக்கில் அவரது மறைவுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜப்பான் ரயில்வே துறையின் மேற்கு பிராந்திய ஒகாயமா ரயில் நிலையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் ரயிலை குறித்த நேரத்தைவிட ஒரு நிமிடம் தாமதாக இயக்கியதாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரை அடுத்து, அந்த ஓட்டுநரின் சம்பளத்திலிருந்து 56 யென் பிடித்தம் செய்யப்பட்டது. (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடால் ரூ.34). இதனை எதிர்த்து அந்த ஓட்டுநர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஒகாயமா மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ஒரு நிமிட தாமதம் என்பது அவர் பணிக்கு வருவதில் நிகழ்ந்த தாமதம் இல்லை. அவர் பணியில் இருந்தபோது வேறு காரணங்களால் ஏற்பட்டது.

மேலும், அந்த ஓட்டுநர் அவருக்கு வழங்கப்பட்ட பணியை திறம்பட செய்வதில் சில தவறுகள் நேரலாம். அதை அவர் திருத்திக் கொள்ளும் நேரமும் பணி செய்வதிலேயே அடங்கும். ஆகையால் அந்த ஓட்டுநருக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்பி வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இருப்பினும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 2.2 மில்லியன் இழப்பீடு கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவை ஏற்பதாகக் கூறிய ஜப்பான் ரயில்வே துறை மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கடந்த ஆண்டு (2021) உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் அவரது உறவுகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.