#கடலூர் || நாஞ்சில் சம்பத் கார் முற்றுகை., பாஜகவினர், போலீசாருக்கு காயம்.!

விருத்தாசலத்தில் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த நாஞ்சில் சம்பத் காரை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விருத்தாசலம், ஜெயப்ரியா மேல்நிலைப் பள்ளியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இன்று நடைபெற்றது. இதில் நெறியாளராக பங்கேற்க வந்த நாஞ்சில் சம்பத்தின் காரை வழிமறித்த, பாஜக மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் சுமார் 50 பேர், அந்த காரை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.  

அப்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை நாஞ்சில் சம்பத் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகவும், அதைக் கண்டித்து அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தபோது, போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விருத்தாசலம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் ஒருவர் மற்றும் இரு பாஜக நிர்வாகிகள் லேசான காயமடைந்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.