காலநிலை மாற்ற பாதிப்பு தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழகத்தில் அனைத்து துறை திட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிசிசி என்ற காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிறுவனம் கடந்த 6 மாதங்களில் உலக அளவில் உயர்ந்து வரும் வெப்பநிலை குறித்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை விவரங்கள் மற்றும் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில திட்டக் குழுவினருக்கு விளக்கும் நிகழ்ச்சி, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. அதில்அந்த அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தொடக்க உரையாற்றினார்.

பின்னர், நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பேசியதாவது:

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும்.

சென்னை மாநகரம் 1.7 மீட்டர் முதல் 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டம் உயர்வால், குறிப்பாக வட சென்னையில் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய மண்டலங்கள் மூழ்கும். டெல்டா மாவட்டங்களில் 1,091 சதுர கிமீ பரப்பளவு மூழ்கும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மக்கள் பிரதிநிதிகள், அவர்களது பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைவர்களாக மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து துறை திட்டங்களிலும் முதல்வர் அறிவுறுத்தல்படி காலநிலை மாற்ற பாதிப்பு தணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த, அடுத்த 10 ஆண்டில் 260 கோடி மரங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொது போக்குவரத்தை ஊக்குவிக்க, மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை அறிவித்துள்ளார். இப்போது 36 லட்சம் பெண்கள் பேருந்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலதுறைகளில் காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி.க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் எழிலரசன், எழிலன், டிஆர்பி ராஜா, சிந்தனை செல்வன், திருமுருகன், ஜவாஹிருல்லா, அப்துல் சமது, சங்கரன் கோவில் ராஜா, ரகுராமன், சதன் திருமலைகுமார், தி.வேல்முருகன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆர்.அருள், எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஈ.ஆர்.ஈஸ்வரன், மாநில திட்டக்குழுதுணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.