நான்கு வருடங்களுக்குப் பிறகு வரும் விக்னேஷ் சிவன் படம்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் அதிகப் படங்களை இயக்குவதேயில்லை. ஒவ்வொரு படத்திற்கும் சில பல வருடங்களை இடைவெளியாக எடுத்துக் கொள்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வேறு வந்துவிட்டதால் பலருக்கும் அந்த இடைவெளி கூடுதலாகிவிட்டது.

சிலம்பரசன் நடித்த 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த பத்து வருடங்களில் மூன்றே மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2015ல் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படம் இயக்குனராக அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதற்குப் பிறகு நயன்தாராவின் காதலராக அதிகம் பேசப்பட்டது தனி கதை.

கடைசியாக சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார். 2018ல் அப்படம் வெளிவந்தது. சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் படம். இதற்குப் பிறகு அஜித் நடிக்கும் 62வது படத்தை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.