பேருந்து நிலையத்தில் பாசிமணி விற்ற பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர். பெண் போலீசுக்கு ஓட்டம் காண்பித்த பஸ்ஸ்டாண்ட் ரோமியோ வசமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளிடம் கொண்டை ஊசி , சீப்பு , பாசி மணி உள்ளிட்ட பொருட்களை விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் காதல் சேட்டையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் புகார் தெரிவித்தார்
அந்த போதை ஆசாமியை பிடித்து பெண் போலீஸ் விசாரித்த போது தான் ஒரு ஓட்டலில் வேலை செய்வதாக கூறி மன்னிப்புக்கேட்ட தோடு அங்கிருந்து தப்பச்செல்ல முயன்றார் , உடனடியாக அவரை நடத்துனர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் டெலக்ஸ் பாண்டியனிடம், ஓட்டல் பெயரை சொன்னதும் அவர் அமைதியானார். செய்தியாளர் வீடியோ எடுப்பதை பார்த்தும் உஷாராகி அந்த போதை ஆசாமியை அதட்டி அங்கிருந்து அழைத்துச்சென்றார்
ஆனால் அவரது காவலில் இருந்து அந்த போதை ஆசாமி திடீரென ஓட்டம் பிடிக்க மற்றொரு காவலர் விரைந்து சென்று, அவனை விரட்டிச்சென்று சட்டையை பிடித்து இழுத்து வந்தார்
இதையடுத்து புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட ல்தகா சைஆ ஆசாமி கூண்டில் சிக்கிய குரங்காய் கொந்தளித்தார். தான் என்ன குற்றம் செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததோடு, தன்னை மீட்க தனது மாமா வருவார் என்று போலீசிடம் சவால் விட்டபடி அங்கு அமர்ந்திருந்தார்
அதன் பிறகு போதை ஆசாமிக்கு ஆதரவாக ஒருவர் கூட வராததால் ரோமியோ போதை ஆசாமி காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார். பெண்களிடம் வம்பு செய்யும் ஆசாமிகளை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.