மும்பையில் இருந்து கேரளா வழியாக வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்- 2 பேர் கைது

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஹவாலா பண பரிமாற்றம் அதிக அளவில் நடப்பதாக வருமான வரித்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் வட மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு பணத்தை கடத்தி வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மும்பை உள்ளிட்ட வட மாநில பெரு நகரங்களில் இருந்து கேரளா வரும் அனைத்து ரெயில்களும் கண்காணிக்கப்பட்டன.

இதில் மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா வழியாக நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிலர் ஹவாலா பணத்தை கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த ரெயிலில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.

கோழிக்கோடு நிலையத்திற்கு ரெயில் வந்த போது அதில் இருந்து 2 பேர் இறங்கினர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை பிடித்தனர். இருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.1 கோடியே 6 லட்சம் பணம் இருந்தது.

பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இது பற்றி போலீசார் விசாரித்த போது மும்பையில் இருந்து ஒருவர் பணத்தை கொடுத்து அனுப்பியதாகவும், அதனை கோழிக்கோட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வாங்கிக் கொள்வார் என கூறியதாகவும் தெரிவித்தனர்.

இந்த பணம் ஹவாலா பணம் என்பதை கண்டுபிடித்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் பணத்தை வைத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஜீதாராம், மராட்டியத்தைச் சேர்ந்த சாகர்தோண்டு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறி இருந்த கோழிக்கோடு நபர் யார்? என்பதை கண்ட றியவும், விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.