மின்வெட்டு… நிலக்கரி தட்டுப்பாடு: அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி
மின்வெட்டு
ஏற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மாநிலத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் தடை பட்டத்துதான் காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் நிலக்கரி கையிருப்பும் மிகக்குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு கவலை கொள்ளும் வகையிலிருக்கிறது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நிலையில்,
நிலக்கரி பற்றாக்குறை
தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோல் இந்தியா
(
இந்திய நிலக்கரி நிறுவனம்
) நிறுவனம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பங்களிக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்தே பல அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 173 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

“நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண வீக்கம் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மி்ன்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்களை அழித்துவிடும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.” என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி நிலவரப்படி, இந்த 173 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 23.17 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தன. இந்த ஆலைகளுக்கான ஒரு நாள் நிலக்கரி தேவை 2.76 மில்லியன் டன்கள் என்பதால் மொத்த கையிருப்பு ஒன்பது முதல் பத்து நாட்கள் வரையே இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தற்போது 72.50 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர்
பிரல்ஹத் ஜோஷி
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனல் மின் நிலையங்களில் 22.01 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உள்ளதாக குறிப்பி்ட்டுள்ளார்.

தினசரி அடிப்படையில் சாதனை அளவாக நிலக்கரி உற்பத்தி செய்யப்படுவதாகவும், நாட்டில் தற்போது போதுமான அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார். நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த நிதியாண்டில் 777.23 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது அதன் முந்தைய நிதியாண்டை விட 8.55 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய நிலக்கரி நிறுவனம் கடந்த நிதியாண்டில் 622.64 மில்லியன் டன் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளதாகவும் இது அதன் முந்தைய நிதியாண்டை விட 4.43 சதவீதம் அதிகமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.