காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கடந்த 2019ம் ஆண்டு,  ஆகஸ்டு 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதியை சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டசபை அற்ற யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது. இது வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்ட முன்வடிவம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பதற்கு முன்னர், இந்தியக் குடியரசுத் தலைவர், அரசியல் அமைப்புச் சட்டம் 370 (3)-இன் கீழ், 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி ஆணையிட்டிருந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் 2019 ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி முன்பு கோரிக்கை விடுத்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே ஆஜரானார். அப்போது, மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதாடினர். இதுதொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா  கூறுகையில். ‘இது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டிய விவகாரம். எனவே, நான் அந்த அமர்வை மீண்டும் அமைக்க வேண்டும்’  என்றவர் கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.