திருமணத்துக்கு நாள் குறிப்பு; காதலனை தேடிச் சென்ற நர்ஸ்! – தாயே அடித்துக் கொன்ற கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணவநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரின் மனைவி ஜெயலெட்சுமி(50). இவர்களின் மகள் சத்தியா(28). பி.எஸ்.சி நர்சிங் படித்திருக்கும் சத்தியா சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயலெட்சுமி, தனது மகளை கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்களின் காதலை தொடர்ந்திருக்கிறது.

இதையடுத்து, சத்தியா வேலைக்குச் செல்வதை அவரின் குடும்பத்தினர் நிறுத்தியிருக்கிறனர். ஆனாலும், சத்தியாவின் காதல் தொடர்ந்து, செல்போனிலேயே வளர்ந்திருக்கிறது. இதற்கிடையே, சத்தியாவிற்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கு சத்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியா வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது, சத்தியாவை அவரின் தாய் ஜெயலெட்சுமி தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

அப்போது, தாய்க்கும், மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகளின் செயலால் ஆத்திரமடைந்த ஜெயலெட்சுமி அருகே இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சத்தியாவின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட சத்தியா அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே, அவரின் உறவினர்கள் சத்தியாவை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காகல், பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து நாகுடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்ற மகளை கொலை செய்த தாய் ஜெயலெட்சுமியை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளையே தாய், கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.