விமான நிலைய வருவாய்; பங்கு கேட்கும் மாநிலங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-தமிழகத்தை தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களும், விமான நிலையத்தை தனியாருக்கு அளிப்பதால் கிடைக்கும் வருவாயில் பங்கு தரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

latest tamil news

தேசிய பணமாக்கல் கொள்கைப்படி தமிழகத்தின் திருச்சி, உ.பி.,யின் வாரணாசி உள்ளிட்ட, 25 விமான நிலையங்களின் பராமரிப்பு பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘விமான போக்குவரத்து ஆணையம், தனியாருடன் சேர்ந்து மேற்கொள்ள உள்ள இத்திட்டத்தில் கிடைக்கும் வருவாயில், மாநில அரசுக்கு பங்கு தர வேண்டும்’ என, தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை மாநில அரசு இலவசமாக மத்திய அரசுக்கு வழங்குகிறது. அங்கு, மத்திய அரசு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு, பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கிறது. ‘இந்த வகையில் மூன்றாவது நபருக்கு நிலத்தை ஒதுக்குவதால் கிடைக்கும் வருவாயில், நிலம் வழங்கிய மாநிலத்திற்கு பங்கு தர வேண்டும்’ என, தமிழக அரசு தெரிவித்திருந்தது.

latest tamil news

இது குறித்து, காங்.,கைச் சேர்ந்த சத்தீஸ்கர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் டி.எஸ்.சிங்டியோ கூறுகையில், ”சத்தீஸ்கர் அரசும் விமான நிலையத்தை மூன்றாம் நபருக்கு அளிக்கும் போது கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை தர வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும்,” என்றார். தமிழகத்தின் இந்த நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான் தெரிவித்துள்ளார்.

”மத்திய அரசுக்கு இலவசமாக நிலம் வழங்குவதில் ஆட்சேபனையில்லை. ஆனால், அதை தனியாருக்கு வழங்கி வருவாய் ஈட்டும்போதும் அதில் மாநில அரசுக்கும் பங்கு தர வேண்டும்,” என, ராமேஸ்வர் ஓரான் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.