ஆபத்தை உணராமல் படியில் தொங்கியப்படி செல்லும் கல்லூரி மாணவிகள் – பெற்றோர்கள் கோரிக்கை

நெல்லையில் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் அரசு கல்லூரி மாணவிகள் குறித்த செய்தி தொகுப்பு.
நெல்லை மாநகர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ளது ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் வகுப்புகளில், 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரே பெண்கள் கல்லூரி இதுதான். மாநகர எல்லைக்குள் பாளையங்கோட்டை மட்டும் டவுன் பகுதிகளில் அதிகமான பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மாநகர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பட்ட முறையில் பேருந்துகள் இயக்கம் எதுவும் இல்லை. இருந்தும் மாநகரில் உள்ள இரண்டு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, காலை மற்றும் மாலை நேரத்தில் மாநகருக்குள் இயக்கப்படும் மொத்தப் பேருந்துகள் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது.
image
இதன் காரணமாகவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வீடு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவிக்கின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, போக்குவரத்து துறையில், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் மாநகருக்குள் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இருந்தும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியர்க்கு என, தமிழக அரசு தனி கவனம் செலுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்கின்றனர் பெற்றோர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.