‘உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க மந்திரிகள் தகவல்

கீவ், 
ரஷியாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 2 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. 21-ம் நூற்றாண்டின் வரலாற்று ஏடுகளில் கறுப்பு அத்தியாயமாக தொடரும் இந்த போருக்கு முடிவுரை எழுத இன்னும் முடியவில்லை.

உக்ரைனின் வளமான பகுதிகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் நிர்மூலமாகி வருகின்றன. அதில் வசித்து வரும் மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது.
அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. இதற்கு பலனும் கிடைத்து வருகிறது.
தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்துள்ளதால், கிழக்கு உக்ரைன் மீது கவனம் செலுத்தும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டு இருக்கிறது.
உக்ரைன் எட்டியுள்ள இந்த வெற்றிப்படிக்கட்டுகளில் அதை ஏற்றி விட்ட பெருமை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சாரும். போர் தொடங்கியது முதலே நவீன ஆயுதங்களையும், நிதியுதவியையும் அளித்து உக்ரைனை தாங்கி வருவது இந்த நாடுகளே.
இந்த உதவியை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தனது மந்திரி சபையில் முக்கிய அங்கம் வகித்து வரும் ராணுவ மந்திரி லாயிடு ஆஸ்டின், வெளியுறவு மந்திரி ஆன்றனி பிளிங்கன் ஆகியோரை உக்ரைன் அனுப்பி வைத்துள்ளார், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினர். அப்போது ரஷியாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களின் பட்டியல் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை நடத்தின.
மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) ராணுவ உதவி வழங்கப்படும் என கடந்த 21-ந் தேதி ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு உதவுதல் மற்றும் இந்த பிரச்சினையில் எடுத்துள்ள தெளிவான நிலைப்பாடு போன்றவற்றுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனிப்பட்ட நிலையிலும், ஒட்டுமொத்த உக்ரைன் மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதைப்போல அமெரிக்க மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உதவியை நாங்கள் பார்த்தோம், உணர்ந்து கொண்டோம்’ என தெரிவித்தார்.
இந்த பயணத்தில் அடுத்த நிலை குறித்தும் அறிந்துள்ளதாக கூறிய ஜெலன்ஸ்கி, அதேநேரம் தங்கள் கூட்டாளிகளின் ஆதரவை எண்ணிப்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆன்றனி பிளிங்கன், ரஷியா தனது போர் லட்சியங்களில் தோல்வி அடைந்திருப்பதாகவும், உக்ரைன் வெற்றி பெற்று வருவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த போரின் எஞ்சிய பகுதிகள் எப்படி இருக்கும்? என்பது எங்களுக்கு தெரியவில்லை, ஆனால் விளாடிமிர் புதினை விட, இறையாண்மை மற்றும் சுதந்திரமான ஒரு உக்ரைன் நீண்ட காலம் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். போரில் உக்ரைன் முன்னோக்கி செல்வதற்கான எங்கள் ஆதரவு தொடரும். இறுதி வெற்றியைக் காணும் வரை அது தொடரும்’ என்று தெரிவித்தார்.
கீவ் நகர தெருக்களில் மக்கள் நடமாட்டத்தை பார்த்ததாக கூறிய பிளிங்கன், இது போரில் கீவ் நகரம் வெற்றி பெற்றதை காட்டுவதாகவும் கூறினார். போர் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரிடம் பேசியிருப்பதாகவும், அவர் ரஷிய அதிபருக்கு ஒரு வலுவான செய்தியை வழங்குவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.