சசிகலா முதல் சஜீவன் வரை… மீண்டும் வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அவர் மகன் அசோக், உதவியாளர் நாராயணன், உறவினர் பாலாஜி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஆறுக்குட்டி

வழக்கின் முக்கிய குற்றவாளியான போயஸ் கார்டன் டிரைவர் கனகராஜ், ஆறுக்குட்டியிடம் சிறிது காலம் டிரைவராக இருந்தார். அதேபோல கனகராஜ் டிரைவாக பணியாற்றிய, இன்ஜினீயர் அசோக் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை கேட்டு, வழக்கு தொடர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அனுபவர் ரவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் சென்னையில் வைத்து ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

சசிகலா

இந்த நிலையில், அ.தி.மு.க பிரமுகரும், மர வியாபாரியுமான சஜீவனிடம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் பர்னிச்சர் வேலை செய்தவர்.

அதன் மூலம் ஜெயலலிதா, சசிகலாவிடம் நன்கு அறிமுகமாகி மிகப்பெரிய தொழிலதிபர் ஆனார். கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சஜீவனும் கேரளாவைச் சேர்ந்தவர். சம்பவம் நடந்தபோது சஜீவன் துபாயில் இருந்தார்.

சஜீவன்

ஆனால், கூடலூர் காவல்துறை சோதனை சாவடியில், சிக்கிய கேரளா குற்றவாளிகளை போலீஸில் பேசி தப்பிக்க வைக்க அவர் சகோதரர் சுனில் உதவியதாக புகார் எழுந்தது.

மேலும், கொடநாடு எஸ்டேட் குறித்து சஜீவனுக்கு நன்கு தெரியும் என்பதால், அவரை வைத்தும் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஜீவன்

இப்படி அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும், விரைவில் வழக்கு அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்லப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.