500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம்: தமிழக தொழிலாளர் நலத் துறையின் 30 அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாங்கும் பொருட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீதான விவாதத்தின்போது, புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி” உருவாக்குதல், பட்டாசு மற்று தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபுணர்களைக் கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 30 முக்கிய அறிவிப்புகள்:

> இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

> அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படும்.

> அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உபயோகமற்ற மற்றும் சீர் செய்ய இயலாத நிலையில் உள்ள இயந்திரங்கள், கருவிகள் மற்றும் தளவாடங்கள் மாற்றப்பட்டு புதியதாக நிறுவப்படும்.

> தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உயர்த்தி வழங்கப்படும்.

> மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்படும் 2 கோடி ரூபாய் நிதி 4.88 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாங்கும் பொருட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

> சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் எடைகள் மற்றும் அளவைகளை மின்னணு முத்திரையிடுதல் பணியை மேற்கொள்ள சட்டமுறை எடையளவுப் பிரிவு கணினிமயமாக்கப்படும்.

> தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

>தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தற்பொழு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகையான ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு 1,000 ரூபாய் மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு 1,200 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித் தொகை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு “அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி” உருவாக்கப்படும்.

>அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு QR Code மற்றும் Chip பொருத்திய திறன் அட்டை (Smart Card) வழங்கப்படும்.

> தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

>தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகை, ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு 1,000 ரூபாய் மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு 1,200 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> தொழிலாளர் துறை இணைய முகப்பு (Portal) மற்றும் வலைதளம் (Website) மறுசீரமைக்கப்படும்.

> தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 16 நல வாரியங்களுக்கென புதியதாக சொந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

> தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கென, தென்காசி மாவட்டம் குற்றலாத்தில் உள்ள ” திரு.வி.க இல்லம்” எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்படும்.

> தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கென, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள ” சிங்காரவேலர் இல்லம் எனும் விடுமுறை ஓய்வு இல்லத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்படும்.

> தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்கென, சென்னை தேனாம்பேட்டையில், “ஜீவா இல்லம்” எனும் ஓய்வு இல்லம் கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்.

> தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கென செங்ல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ” ஜவஹர்லால் நேரு இல்லம்” எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்படும்.

> கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

> பட்டாசு மற்று தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபுணர்களைக் கொண்டு
விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

> பட்டாசு உற்பத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளிக் காட்சியினை (Video) தயாரித்து சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியீடு செய்யப்படும்.

> தன்னார்வ பயிலும் வட்டங்களுக்கு திறனறி பலகை (Smart Board) வசதி உருவாக்கப்படும்.

> வேலைவாய்ப்புத் துறையின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் துறையின் வலைதளம் மறுசீரமைப்பு செய்யப்படும்.

> அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி வழங்கப்படும்.

> தேசிய திறன் போட்டிகளில் வென்ற திறன் போட்டியாளர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

> தமிழ்நாட்டில் திறன் பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் திறன் தொகுப்பு உருவாக்கப்படும்.

> உட்கட்டமைப்பு, பயிற்சித் தரம் மற்றும் பணியமர்த்தம் அடிப்படையில், தமிழகத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படும் மற்றும் முதல் மூன்று இடங்களை பெறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.