ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ்: மீண்டும் வெளிநாடு பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். மேமாதம் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 3 நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக  வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இது நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம்.

இந்தியாவின் பிரதமராக மோடி பதவி ஏற்றதும், கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று 5 நாள் அரசுமுறை பயணமா அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது, ஐ.நா. பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளை சென்றுள்ள பிரதமர் மோடி, கடந்த 2019ம் ஆண்டுவரை  58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக மொத்த செலவு ரூ.517.82 செலவிடப்பட்டுள்ளது என  நாடாளுமன்றத்தில் அமைச்சர் முரளீதரன் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி  16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி  இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் கொரோனா தொற்று காரணமாக அவரது வெளிநாட்டு பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை மே மாதம் தொடங்குகிறார். அதன்படி மே மாதம் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்கு புறப்படுகிறார். டென்மார்க் பயணத்தில் அந்நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்த பிறகு டென்மார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசுவுள்ளார் என்று கூறப்படுகிறது.மேலும்,டென்மார்க் நடத்தும் 2 வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

இறுதியாக,மே 4 ஆம் தேதி பிற்பகல் பிரதமர் இந்தியா திரும்பும் பயணத்தில்,பாரிஸில் சிறிது நேரம் செலவிட்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை சந்திப்பார் என்று வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.