தஞ்சை விபத்து மிகுந்த துயரமான சம்பவம்: சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்

தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற அப்பர் குருபூஜை விழாவின் போது, தேர்பவனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர், குடியரசு தலைவர் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறன்றனர்.

இந்நிலையில், திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அவர் கூறியதாவது, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, களிமேடு கிராமத்தில்‌ இன்று 27.4.2022 அதிகாலை நடைபெற்ற தேர்‌ திருவிழாவில்‌ எதிர்பாராத விதமாக தேர்‌ மின்கம்பியில்‌ உரசியதால்‌ ஏற்பட்ட விபத்தில்‌ 11 பேர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்‌ என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியை பேரவைக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறே. துயரமான செய்தியினைக்‌ கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்‌.

காயமடைந்த 16 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சையும் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூருக்கு நேரடியாக சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.