இந்தியாவை விட்டு வெளியேறிய நிறுவனங்களை ராகுல் காந்தி சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார். ராகுல் காந்தி இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறிய ஏழு சர்வதேச நிறுவனங்களை சுட்டிக்காட்டும் விதமாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சில தரவுகளை பகிர்ந்திருக்கிறார்.
அந்த பதிவில், “இந்தியாவில் நிலவி வரும் சூழலால் 7 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டன. 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். பிரதமர் மோடி அவர்களே…ஹேட் இன் இந்தியாவும், மேக் இன் இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது. வேலையின்மை பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.
2017-ம் ஆண்டு செவ்ரோலெட், 2018-ல் மேன் டிரக்ஸ், 2019-ல் ஃபியட் மற்றும் யுனைட்டெட் மோட்டார்ஸ், 2020-ல் ஹார்லி டேவிட்ஸன், 2021-ல் ஃபோர்டு, 2022-ல் டாட்ஸன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.