LIC IPO: முதலீடு செய்யப் போறிங்களா? இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க!

இந்தியப் பங்குச் சந்தையில் சமீப காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடு எல்.ஐ.சியின் பங்கு வெளியீடு. 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. நடப்பு நிதி ஆண்டு தொடக்கத்தில் எல்.ஐ.சி பங்கு விற்பனை இருக்கும் என அறிவிப்பு வெளியானது.

எல்.ஐ.சி பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் கிடைத்த நிலையில் மார்ச் மாதமே வெளியீடு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகத் தாமதமானது. இது ஐபிஓ வெளியீட்டுக்கு சரியான தருணம் இல்லையென கருதப்பட்டது.

இந்நிலையில், ஒரு வழியாக எல்.ஐ.சி ஐபிஓ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஓ வெளியீடு நிறுவன முதலீட்டாளர்களுக்கு மே 2-ம் தேதி நடக்க உள்ளது. பிற முதலீட்டாளர்களுக்கு மே 4-ம் தேதி தொடங்கி மே 9-ம் தேதி முடிவடைய உள்ளது.

ஐபிஓ

இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திவருகிறது எல்ஐசி. இப்போது 3-0க்கும் மேலான காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றின் செயல்பாடு சராசரியாக 15 ஆண்டுகள்தான்.

சர்வதேச நிறுவனங்களூம், பல தனியார் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் துறையில் தீவிரமாகக் களமிறங்கி சந்தையைப் பிடிக்க முயற்சித்து வருகின்றன. ஆனாலும் இன்னமும் இந்திய இன்ஷூரன்ஸ் சந்தையின் ஜாம்பவானாகவே நீடிக்கிறது எல்.ஐ.சி. 30 கோடி பாலிசிதாரர்கள் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்கள். புதிய பிசினஸ் ப்ரீமியம் பிரிவில் 61 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் பாலிசிகளின் எண்ணிக்கையில் 71 சதவிகிதத்தைத் தன்வசம் வைத்துள்ளது. பங்குச் சந்தையிலும் எல்.ஐ.சி முக்கிய முதலீட்டாளராக இருந்துவருகிறது.

தொடக்கத்தில் எல்.ஐ.சி ஐபிஓவில் 5 சதவிகித பங்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் தற்போது 3.5 சதவிகித பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் ரூ.21,000 கோடி திரட்டப்பட உள்ளது.

எல்.ஐ.சி-யின் சந்தை மதிப்பு ரூ.5.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.902-ரூ.949 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி விலையில் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ரூ.45 தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.

விற்பனைக்கு வெளியிட உள்ள 3.5 சதவிகித பங்குகளில் 10 சதவிகித பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் சிறு முதலீட்டாளர்களுக்கும், 15 சதவிகிதம் நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கும்ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த எல்.ஐ.சி ஐபிஓ பற்றியும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது பற்றியும் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

ரெஜி தாமஸ்

“இன்ஷூரன்ஸ் துறையில் பல நிறுவனங்கள் உருவெடுத்திருந்தாலும் எல்.ஐ.சியின் சந்தைப் பங்களிப்பு இன்னமும் 70 சதவிகிதம் என்ற அளவில் இருக்கத்தான் செய்கிறது. எனவே எல்.ஐ.சி ஐபிஓ மீது முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பது இயல்புதான்.

ஆனால் பொதுவாகவே ஐபிஓ வெளியீடுகளில் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். காரணம் ஐபிஓ வரும் பங்கு பட்டியலாகும்போது சில நாட்கள் ஏற்றம் காணலாம். அதே சமயம், இறக்கத்துக்கும் உள்ளாகலாம்.

எல்.ஐ.சி ஐபிஓ விஷயத்தில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். இன்று உலகம் முழுவதுமே டிஜிட்டல் மயம் அதிகரித்துள்ளது. பாலிசிபசார் இன்ஷூரன்ஸ் பிரிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

பாலிசிகளை எல்.ஐ.சி.யில் தான் வாங்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. பெரும்பாலான காப்பீடு நிறுவனங்கள் இணையதளம் மூலம், பாலிசிபசார் மற்றும் பிற விநியோகஸ்தர்கள் மூலம் பாலிசிகளை விற்றுவருகின்றன. அவை தங்கள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் கமிஷன், அவற்றின் கவரேஜ் ஆகியவை எல்.ஐ.சி பாலிசிகளுக்குப் போட்டியை அதிகப்படுத்தி உள்ளது. எல்.ஐ.சி அல்லாத நிறுவனங்களின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துவருகிறது. கொரோனாவுக்குப் பிறகு இன்ஷூரன்ஸ் எடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் காப்பீடு எடுப்போரின் சதவிகிதம் மொத்த மக்கள் தொகையில் 6-7 சதவிகிதம் என்ற அளவில்தான் உள்ளது. எல்.ஐ.சி.க்குப் போட்டி அதிகரித்துள்ளதோடு, மாறிவரும் டிஜிட்டல் மயமும் பாலிசி எடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. எல்.ஐ.சி. ஃபண்டமென்டல் நன்றாக இருந்தாலும் வருங்காலத்தில் பிற நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்பட்சத்தில் எல்.ஐ.சி.யின் இப்போதைய சந்தைப் பங்களிப்பு குறையவும் வாய்ப்புள்ளது.

எல்.ஐ.சி

அதுமட்டுமல்லாமல் இன்ஷூரன்ஸ் துறை பங்குகள் பொதுவாகவே குறுகிய காலத்தில் வர்த்தகம் செய்வதற்கான பங்குகளாக இருக்காது. ஏனெனில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு 5 முதல் 6 வருடங்கள் வரை ஆகலாம். மெதுவான வளர்ச்சி வேகத்தையே இத்துறை கொண்டிருக்கிறது. இதனால் இன்ஷூரன்ஸ் துறை நிறுவனங்களின் பங்கும் மெதுவாகவே ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும். எனவே எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலீடு செய்துவிட்டு சில ஆண்டுகளுக்குப் பொறுத்திருக்க வேண்டும். குறுகிய கால வர்த்தகம் செய்ய நினைப்பவர்களுக்கான பங்காக இது இருக்காது.

எனவே எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்பவர்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பார்க்கலாம். மேலும் எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்குவதற்காகவே தற்போது வைத்திருக்கும் முதலீடுகளை விற்க நினைக்காதீர்கள். அப்படி கைவசமுள்ள முதலீடுகளை விற்றுவிட்டு எல்.ஐ.சி பங்குகளை வாங்கும் அளவுக்கு அதன் போக்கு இருக்குமா என்பது தெரியாது. எனவே சிறு முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து எல்.ஐ.சி பங்கின் போக்கை தெரிந்துகொண்டு பின்னர் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பாலிசிதாரர்களுக்கு சலுகை விலையில் கிடைப்பதால் ஐபிஓ வெளியீட்டில் முதலீடு செய்வது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

மக்களுக்கு மிகப் பரிட்சயமான, நம்பிக்கைக்குரிய நிறுவனம் இது என்பதால், பல தரப்பினரும் இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் எல்.ஐ.சி நிறுவனப் பங்கை வாங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.