இலங்கையில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் வீசா

கொழும்பு: 
அந்நிய செலவாணி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே ஆகியோரை பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இருவரும் பதவியில் இருந்து விலக மாட்டோம் என உறுதியாக தெரிவித்து வருகின்றனர். மேலும் இழந்த பொருளதாரத்தை மீட்க புதிய அமைச்சரவையை கோத்தபய ராஜபக்‌ஷே அமைத்தார். அந்த அமைச்சரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் பொருளாதார சரிவில் இருந்து மீழ்வது அந்நாட்டுக்கு கடினமாக உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடனுதவி, பொருட்கள் உதவி ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்வோர் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கி தொழில் செய்யலாம் என்ற அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டடங்கள் வாங்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இலங்கை நாட்டின் முதலீடுக்கு உதவும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.