“பணத்துக்காகத்தான் 2-வதாக மணந்தேன்!'' – மூன்று நாள்களில் நகை, பணத்துடன் ஓட்டம்பிடித்த பெண்!

மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜாதவ். மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருக்கு 28 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவருக்கு சற்று மனப் பிறழ்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பலரும் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். அதனால், ராஜேஷ் தன் மகனுக்கு திருமணம் முடிக்க கமலேஷ் கதம் என்ற புரோக்கரை அணுகியிருக்கிறார். கமலேஷ் ஆஷா என்பவரை அறிமுகம் செய்தார். ஆஷா தன்னை தன் அத்தை மனிஷாதான் வளர்த்ததாகவும், தான் ஒரு ஆதரவற்றவர் என்றும் ஜாதவிடம் தெரிவித்தார். இதையடுத்து இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்துக்கு முடிவு செய்தனர். கடந்த மாதம் 29-ம் தேதி கோயில் ஒன்றில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்துகொண்டனர். திருமணத்தை கோர்ட்டில் பதிவு செய்யவேண்டும் என்று கமலேஷ் கதம் கேட்டுக்கொண்டார். இதை ஜாதவ் ஏற்றுக்கொண்டார். ஆனால் நீதிமன்றம் சென்றபிறகு ஆவணங்களில் கையெழுத்திட தனக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்கவேண்டும் என்று மனிஷா நிபந்தனை விதித்தார். வேறு வழியில்லாமல் ஜாதவ் அதற்கு சம்மதித்து உடனே 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். எஞ்சிய தொகையை மறுநாள் கொடுத்தார். அதன் பிறகுதான் ஆஷா தன் கணவன் வீட்டுக்குச் சென்றார்.

புதுமணப் பெண்

ஆனால், மூன்று நாள்கள் மட்டும்தான் ஆஷா தன் கணவன் வீட்டிலிருந்தார். வீட்டில், தான் மார்க்கெட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு திரும்ப வரவே இல்லை. அவர் வீட்டை விட்டு செல்லும்போது வீட்டிலிருந்த ரூ.4.39 லட்சம்மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் போட்ட தங்க வளையல்களையும் கொண்டு சென்றுவிட்டார். அதையடுத்து, ஜாதவ் ஆஷாவுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

போலீஸ்

பின்னர், கடைசியாக வேறு ஒரு நம்பரிலிருந்து ஆஷாவுக்கு போன் செய்தபோது எடுத்துப் பேசினார். அப்போது அவர், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், பணத்துக்காகத் தான் இது போன்று நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஜாதவ் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் டி.லிகாடே கூறுகையில், “இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் மீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கும்பல் இதற்கு முன்பும் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.