பிரான்ஸ் அதிபர் மீது தக்காளி வீச்சு

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இம்மானுவேல் மேக்ரோன் 2-வது முறையாக அதிபராகி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பிரான்சில் ஒரே நபர் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2-ம் கட்டத் தேர்தலில் மேக்ரோனுக்கு 58 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. 

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செர்ஜி பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு இம்மானுவேல் மேக்ரோன் வருகை தந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேக்ரோன் மீது தக்காளிகளை வீசினார். இதனைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் உடனடியாக சுதாரித்து குடையை விரித்து மேக்ரோனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 

மேலும் படிக்க | பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரோன் மீண்டும் தேர்வு; உலக தலைவர்கள் வாழ்த்து

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பொதுவெளியில் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லியோனில் நடந்த சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சிக்கு சென்றிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் மேக்ரோன் மீது முட்டையை வீசினார். கடந்த ஜூன் மாதம், பொதுமக்களிடம் அவர் கை குலுக்கச் சென்றபோது கூட்டத்தில் இருந்த நபர் அவரை கன்னத்தில் அறைந்தார். 

இம்மானுவேல் மேக்ரோன் கடந்த முறை கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற மஞ்சள் ஆடைப் போராட்டம் தலைநகர் பாரிஸ் மட்டுமின்றி நாடு முழுவதும் பரவியது. தற்போது மேக்ரோன் மீண்டும் அதிபராகியுள்ள நிலையில், மீண்டும் போராட்டங்கள் அதிகரிக்கும் என பரவலாக கருத்து எழுந்துள்ள நிலையில், பொதுவெளியில் மேக்ரோன் மீது தக்காளி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | Watch Video: பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.