மே 1ந்தேதி அன்று கிராம சபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை : தமிழ்நாடு முழுவதும்  உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மே-1 (தொழிலாளர் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப் பொருட்கள் உள்ளன.

ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN ABHIYAN) மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30.ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும். கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.