கோவை மக்களுக்கு சிறுவாணி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி வளாகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கோவை மாநகராட்சிக்கு 590 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பதில் வராத காரணத்தால் அதிகாரிகளை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கோவை மாவட்டத்திற்கு சிறுவாணி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முதல் பணி வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துவங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.