நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்

மும்பை:
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். 
அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
மிக விரைவில் மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்புவேன். உங்கள் அன்பான வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மருத்துவர்களின் பரிந்துரையின் கீழ், நடிகர் அக்சய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரிசோதனை செய்தபோது அக்சய்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அக்சய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள பிருத்விராஜ் திரைப்படம் ஜூன் 3 ந் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.