“அதிமுக-வுக்கு சொந்த கொள்கை இருக்கிறதா என்பதே சந்தேகம்!" – சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற சி.பி.எம் கட்சியின் மண்டல பேரவைக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “பருத்தி, நூல் விலையேற்றத்தைக் கண்டித்து தொழிலாளர், முதலாளிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 25,00,000 குடும்பங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் ஜவுளித்தொழில் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு பருத்தி கழகத்தை செயல்படுத்தாமல் இருப்பதுதான். அந்த கழகத்தின் மூலம் பருத்தியை வாங்கி விற்பதற்கு பல கட்டுப்பாடுகளை போட்டுவிட்டு… அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக பருத்திகளை வாங்கி, அதை பதுக்கிவைத்து, இரண்டு மூன்று மடங்கு விலையேற்றி விற்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அண்மையில் கூட தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆலை முதலாளிகளெல்லாம், மத்திய நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். `காட்டன் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவை உடனடியாக செயல்படுத்துங்கள். தேவைபோக மீதி இருக்கும் பருத்தி பொருள்களை மட்டும் ஏற்றுமதி செய்யுங்கள், அதிகமாக ஏற்றுமதி செய்யாதீர்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், நிதியமைச்சரோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், `நீங்கள் சொல்லும் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டால், பருத்தியை வாங்கி விற்கும் வியாபாரிகள் கஷ்டப்படுவார்கள். ஆகவே, நீங்களாகவே பேசிக் கொள்ளுங்கள்’ எனக் கூறி அனுப்பியுள்ளார்.

பருத்தி தொழிலை நம்பியிருக்கும் 25 லட்சம் குடும்பங்களைக் கூட எண்ணிப் பார்க்காமல், கார்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே பருத்தியை பதுக்குவதற்கு அனுமதித்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பருத்தியை, காட்டன் கார்பரேஷன் ஆஃப் இந்தியா மூலமாகவே கொள்முதல் செய்து, சீராக விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கு தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நாங்களும் வலியுறுத்துகிறோம். மேலும், இது போன்ற பதுக்கலை ஒழிப்பதற்காக… தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசே நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து, சீராக ஆலைகளுக்கு விநியோகிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பருத்தி

பருத்தி சார்ந்த தொழில் மட்டுமல்லாமல், சிறு, குறு தொழில்களும் இன்று நம் நாட்டில் அழிந்து கொண்டிருக்கிறது. அலுமினியம், காப்பர், இரும்பு போன்ற பொருள்களின் விலை ஏறிவிட்டது. அந்த மூலப் பொருள்களை எல்லாம் வாங்கி வைத்திருக்கும் கார்பரேட் முதலாளிகள், ஒரு மடங்குக்கு 4 மடங்கு விலையை ஏற்றி விற்கிறார்கள். ஆகவே, லட்சக்கணக்கான தொழிலாளிகளுக்கு வேலை தரக்கூடிய சிறு, குறு தொழில்கள் இன்று அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற மூலப்பொருள்களை மத்திய அரசே கொள்முதல் செய்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சிறு, குறு தொழிலை பாதுகாக்க முடியும். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், கவுன்சிலர் போன்றோர் 50 சதவிகிதத்துக்கும் மேல் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது.

ஆனால் பெண்கள் தலைவராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்தாலும்… அவர்களை சார்ந்திருக்கும் ஆண்கள்தான் அந்தப் பணிகளை செய்யும் நிலைமை வந்திருக்கிறது. உதாரணமாக, நகரமன்றத் தலைவர் பெண் என்றால் அவர் அமைதியாகதான் இருக்கிறார். ஆனால், அவருடைய கணவரோ, தந்தையோ, சகோதரனோ தான் நகர மன்றத் தலைவரைப் போல செயல்படுகிறார். இது சட்டத்திற்கு விரோதமானது. சென்னை மாநகராட்சியில், பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கு பதிலாக அவர்களை சார்ந்த ஆண்கள் அதிகாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்திருக்கிறார்கள். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதிகாரத்துக்கு வந்திருக்கும் பெண்களுக்கு, அந்த பதவிக்குண்டான பயிற்சியை அளிக்க வேண்டுமே தவிர… அவர்களுக்கு பதிலாக, ஆண்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதென்பது பெண்களை அதிகாரத்தில் அமர வைப்பதையே அர்த்தம் அற்றதாக்கிவிடுகிறது. எனவே, அந்த நிலை மாறவேண்டும்.

சி.பி.எம் மண்டல பேரவைக் கூட்டம் – விழுப்புரம்

பா.ஜ.க அரசோடு ஒத்துப்போகும் அரசாக , தி.மு.க அரசு இருக்காது என ஏற்கெனவே சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பா.ஜ.க-வை விமர்சித்து பேசியிருக்கிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் எதிர்த்து போராடியுள்ளார்கள். எனவே, இவர்கள் பா.ஜ.க-வுடன் ஒத்துப்போகிறார்கள் என்பது உண்மைக்கு மாறான தகவல். அ.தி.மு.க இன்று பா.ஜ.க-வின் கையாள் மாதிரி ஆகிவிட்டது. பல விஷயங்களில் பார்த்தால், அ.தி.மு.க-விற்கு சொந்த கொள்கை இருக்கிறதா என்றே சந்தேகமாக உள்ளது.

முழுக்க, முழுக்க பா.ஜ.க என்ன சொல்கிறதோ அதைதான் அ.தி.மு.க செய்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் குறித்து அ.தி.மு.க இதுவரை வாய் திறந்து பேசியிருக்கிறதா… இல்லையே. அவர்கள், பா.ஜ.க-வை தூக்கி பிடிக்க, தூக்கி பிடிக்க தமிழகத்தில் அ.தி.மு.க-விற்கு அரசியல் களமே இல்லாமல் போகும் வாய்ப்புதான் அதிகமாக உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.