அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பை உருவாக்கும் சீனா- தயார் நிலையில் இந்திய ராணுவம்

புதுடெல்லி:
இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் சீன ராணுவம் உள் கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா தெரிவித்துள்ளார்.
திபெத் பிராந்தியத்தில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அருகே பல உள்கட்டமைப்பை சீன ராணுவம்  மேம்படுத்தி வருகிறது, சாலை, ரயில் மற்றும் விமான இணைப்புகள் மற்றும் 5 ஜி மொபைல் நெட்வொர்க் உள்ளிட்டவை அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். 
அந்த பகுதியில் இரண்டு எல்லைக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை இரட்டை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் நிலைமையை இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது என்றும்,  நாங்கள் எங்கள் உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை, நிலைமையை கையாளும் வகையில் மேம்படுத்துகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
சீனாவுடனான எல்லையில் ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என்றும், எல்லை சரியாக வரையறுக்கப்பட்டால், எந்த பிரச்சனையும் இருக்காது என்றும்  ராணுவத்தின் கிழக்கு பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.