இடம் மாறுகிறது மெரினா கடற்கரை காந்தி சிலை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக, மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், ‘காந்தி சிலை’ சேதமடைவதைத் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, மெரினா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே மெட்ரோ ரயில் நிலையம், அதன் கீழ், சுரங்கப்பாதை பணிகள் நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகளின்போது, சிலை சேதமடைவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை மாற்றிவைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை, வரலாற்று சிறப்பு மிக்க மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் காந்தி சிலை மாற்றி வைக்கப்படும்.

மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தப்பின் மீண்டும், மெரினா கடற்கரைக்கு காந்தி சிலை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.