மத்திய அதிகாரிகள் சோதனைக்குப் பயந்து பட்டாசு ஆலைகள் மூடல்? – தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

தமிழகத்திலேயே அதிக அளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருவது விருதுநகர் மாவட்டத்தில்தான். சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, சிவகாசி உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு தொழிலுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைப்பும், உச்ச நீதிமன்றமும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை, சரவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு தடை என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் அதிக அளவில் வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பல்வேறு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூர், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறதா, சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறதா, பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்தும் பட்டாசு ஆலைகளில் மத்திய ஆய்வு குழுக்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை
மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலை

இதில் முறைகேட்டில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளுக்கும், உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாத ஆலைகளுக்கும் அபராதம் விதித்தும், அதிகப்படியான முறைகேடுகளில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் ஆய்வுக் குழுவின் சோதனைகளுக்கு பயந்து தாமாக பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளித்து ஆலையை மூடி வருகின்றனர். இதனால் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த ஆய்வுப்பணிகள் இன்று 3-வது நாளாக தொடர்ந்தது. அதன்படி, சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.