அமெரிக்காவை விட இந்தியாவில் பணவீக்கம் குறைவாக உள்ளது- பாதுகாப்புத்துறை மந்திரி கருத்து

புனே:
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமாக உயர்ந்தது. மொத்த விற்பனை பணவீக்கம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 15.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பாஜக தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:
அதிகரிக்கும் பணவீக்கம் பற்றி நாட்டில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று அதிகரித்திருந்த காலத்தில் சர்வதேச அளவில் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்தது. 
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தனது விவேகமான நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்தினார்.  இதைப் பாராட்டுகிறேன்.
தற்போது ரஷியா உக்ரைன் போர் நெருக்கடி சூழல் காரணமாக உலக அளவில் விநியோகச் சங்கிலி முறை சீர்குலைந்துள்ளது. 
மேலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலை, எந்த நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது. 
பணக்கார நாடான அமெரிக்காவில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 
அதைவிட குறைந்தபட்சம் இந்தியாவில் சிறப்பாக உள்ளது. இதனால் நீங்கள் ( பாஜக தொண்டர்கள்) குற்ற உணர்வுடன் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.