சிறுமியை ஏமாற்றியதாக புகார்… விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர் மரணம்

போபால்: 
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது வாலிபர் விஷம் அருந்தி விட்டு காவல் நிலையத்திற்கு வந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து போலீஸ் சூப்பிரெண்டு கூறியதாவது:- 
குவாலியர் கோல் பாதியா பகுதியில் வசித்து வந்தவர்  கிருஷ்ணா ஜெயின் (வயது 24). இவர் மைனர் சிறுமியை ஏமாற்றியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஜனக்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வியாழக்கிழமை இரவு கிருஷ்ணா ஜெயின், அந்த மைனர் பெண்ணுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர்களது குடும்ப உறுப்பினரும் இருந்தனர்.
அப்போது கிருஷ்ணா ஜெயின், நாங்கள் மவுத் பிரஸ்னரில் விஷம் கலந்து அருந்திவிட்டோம் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் விஷத்தை அருந்தாமல் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துள்ளதை பார்த்த போலீசார் விஷ பாட்டிலை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட கிருஷ்ணா ஜெயினை மருத்துவமனையில் சேர்த்தனர். 
ஆனால், கிருஷ்ணா ஜெயின் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது கிருஷ்ணா ஜெயின் மரணமடைந்ததால் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளேன். அதன் பின்னர், மாவட்ட நீதிபதி ஒரு நீதிபதியை நியமித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.