போலி வருவாய்துறை அலுவலகம்; சான்றிதழுக்கு ரூ.10,000… லட்சக்கணக்கில் முறைகேடு – கண்டுகொள்ளாத அரசு

புதுச்சேரி திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான அங்காளன் கடந்த 22.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் வல்லவனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “முதியவர்கள், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எனது தொகுதியைச் சேர்ந்த பெண்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் வருவாய் துறை அதிகாரிகள் கொடுக்கும் குடியிருப்பு, குடியுரிமை மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை இணைத்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வழங்குவார்கள். அதனடிப்படையில் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

ஆவணம்

வருவாய்துறை தாசில்தார் அல்லது துணை தாசில்தார் போன்றவர்களால் வழங்கப்படும் அந்த சான்றிதழ்களை, கலிதீர்த்தாள் குப்பம் மேயர் தெருவைச் சேர்ந்த N. ரமேஷ் என்பவர் பயனாளிகளிடம் ரூ.10,000/- பெற்றுக்கொண்டு போலியாக தயாரித்து கொடுத்து வருகிறார். அதற்காக தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களின் பெயர்கள் பதித்த முத்திரையையும், தாலுகா அலுவலத்தின் முத்திரையையும் போலியாக தயாரித்து பயன்படுத்துவதுடன், அவர்களின் கையெழுத்தையும் இவரே போலியாக போட்டு போலி சான்றிதழ்களை விற்று வருகிறார். மேலும், அந்த சான்றிதழ்களில் வருவாய் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்ற எண்களையும் (Despatch No) போலியாக குறிப்பிட்டு வருகிறார். ரமேஷ் என்ற நபர் போலியாக போடும் எண்களை (Despatch No.) வைத்து வருவாய் துறையில் சரிபார்த்தால், அந்த எண் உண்மையாக யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும்.

இப்படி இந்த நபர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் துறை அதிகாரிகளால் வழங்கப்படும் சான்றிதழ்களை போலியாக தயாரித்து, பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொடுத்து வருகிறார். வசதி படைத்த பலர் இந்த நபரிடம் வருவாய் குறைவாக உள்ளதுபோல் சான்றிதழ்களை வாங்கி அரசுத் துறைகளில் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான போலிச் சான்றிதழ்களை புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கி வருகிறார் இந்த நபர். இதனால் உண்மையான பயனாளிகள் பயனடையாமல் போகின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் திருபுவனை தொகுதியைச் சேர்ந்தவர்கள் சமர்ப்பித்திருக்கும் விண்ணப்பங்களில் உள்ள வருவாய் அதிகாரிகளின் கையெழுத்து, வருவாய் அதிகாரிகளின் பெயர் பதித்த முத்திரை, அலுவலக முத்திரை மற்றும் வருவாய் துறையின் நம்பர் (Despatch No.) போன்றவற்றை ஆய்வு செய்தால் பல விண்ணப்பங்கள் இந்த நபரால் போலியாக வழங்கப்பட்டது என்பது தெரியவரும்.

புதுச்சேரி

இதுமட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறைகளில் சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்கும்போது அதில் மருத்துவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் (Gazzetted Officer) ஒப்புதல் கையெழுத்து இருக்க வேண்டும். அந்த முத்திரைகளையும் போலியாக தயாரித்து போலி கையெழுத்துகளை போட்டு வருகிறார். எனவே அவர் மீது உடனே தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இனிமேல் இதுபோல் போலியான சான்றிதழ்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் லட்சுமி க/பெ கலியபெருமாள், 14 தெற்கு வீதி, கலிதீர்த்தாள் குப்பம் பேட் என்ற முகவரி கொண்ட விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 03.12.2021 தேதியிட்ட அந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சான்றிதழில் வருவாய் துறையின் எண் (Desptch No.) 5907/TOV/C/2021 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த சான்றிதழ் இந்த நபரால் போலியாக வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த விண்ணப்பத்தில் இருக்கும் 5907/TOV/C/2021 என்ற எண்ணை வருவாய் அலுவலகத்தில் சோதித்தபோது, அது பிரியங்கா த/பெ முத்து என்பவருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ் என்பதும், அவரது முகவரி எண்.12, பலராமன் ரெட்டியார் தெரு, திருபுவனை பாளையம் என்பதும் தெரியவந்தது. எனவே. லட்சுமி என்ற நபருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் போலியானவை. வருவாய் அதிகாரிகளால் பிரியாங்கா என்பவருக்கு அளிக்கப்பட்ட உண்மை சான்றிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன். இது போன்ற தவறுகள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அங்காளன்

இதுகுறித்து திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளனிடம் பேசினோம். “மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருப்பது உண்மைதான். அரசுத்துறைகளில் வேலை வாய்ப்புகளாக இருந்தாலும், நலத்திட்ட உதவிகளை பெறுவதாக இருந்தாலும் அதற்கு வருவாய் துறை அளிக்கும் சான்றிதழ்தான் முக்கியமானது. அந்த சான்றிதழ்களை கடந்த 16 வருடங்களாக ரமேஷ் என்பவர் தனியாக வருவாய் துறை அலுவலகத்தை நடத்தி போலியாக தயாரித்து வழங்கி வருகிறார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் நாங்கள் ஆய்வு செய்த 15 சான்றிதழ்களில் 13 சான்றிதழ்கள் போலியானவை. அப்படியானால் கடந்த 16 வருடங்களில் எவ்வளவு போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பார் ? எந்தெந்த துறைகளில் கொடுத்திருப்பார் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சான்றிதழுக்கு ரூ.10,000 என பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார். புதுச்சேரி அரசின் கூட்டுறவு பஞ்சாலையில் வேலை செய்யும் ஒருவர் இவரிடம் போலி சான்றிதழ் பெற்று, முதியோர் உதவித் தொகையை வாங்குகிறார். ஆதாரங்களுடன் நான் புகாரளித்து ஒரு மாதமாகியும் இன்னும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

மாவட்ட ஆட்சியர் வல்லவனை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, “அனைத்து துறைகளிலும் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக எம்.எல்.ஏ புகாரளித்திருக்கிறார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் விசாரணை நடத்தும்படி கூறியிருக்கிறேன். எங்கள் விசாரணையில் தாசில்தாரின் கையெழுத்தை போலியாக போட்டு சான்றிதழ் கொடுத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. அதனால் அந்த புகாரை சிபி.சி.ஐ.டி காவல் பிரிவுக்கு அனுப்பியிருக்கிறோம். அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்” என்றார்.

புதுச்சேரி

சி.பி.சி.ஐ.டி எஸ்.பி பழனிவேலை தொடர்பு கொண்டபோது, “நான் விடுமுறையில் இருக்கிறேன். வேறு வேலையாக வெளியூர் வந்திருக்கிறேன். விடுமுறை முடிந்து வந்ததும் நேரில் வாருங்கள். அதுகுறித்து போனில் பேச முடியாது” என்று முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.