ரூ.1,526 கோடி மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பறிமுதல்! – குளச்சல் மீனவர்கள் உட்பட 20 பேர் கைது

கேரள மாநிலம், கொச்சி கடல் பகுதில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் நடக்கவிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வருவாய் உளவுத்துறை இயக்குநர் தலைமையில் கடற்படை காவலர்கள் அரபிக்கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு ஆபரேஷன் `கோஜ்பீன்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், லச்சத்தீவு அருகிலிருக்கும் அகத்தி தீவு பகுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரு கப்பலில் இரண்டு மீன்பிடி விசைப்படகுகளில் சாக்கு மூட்டைகளில் ஹெராயின் போதைப்பொருள்கள் இறக்கப்பட்டதாகவும், அந்த பொருள்களுடன் இரண்டு படகுகளும் சர்வதேச கடல் வழியாக பயணிப்பதாகவும் கூட்டு ரோந்து படையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய கூட்டு ரோந்து படையினர், சந்தேகத்துக்கு இடமாக வந்த பிரின்ஸ், லிட்டில் ஜீசஸ் எனப் பெயரிடப்பட்ட இரண்டு மீன்பிடி விசைப்படகுகளை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அதில், விசைப்படகுகளில் மீன்களை பதப்படுத்தி வைக்கும் அண்டர்கிரவுண்ட் ஸ்டோரேஜ் பகுதியில் சாக்கு மூட்டைகளில் ஹெராயின் போதைப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பிடிக்கப்பட்ட ஹெர்யின்

இதையடுத்து, இரண்டு மீன்பிடி படகுகளையும் கொச்சி துறைமுகம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. டைரக்டர் ஆஃப் ரெவன்யூ இண்டலிஜன்ஸ், கோஸ்ட் காட் ஆகியவை இணைந்து விசாரணை நடத்தியதில், இரண்டு விசைப்படகுகளில் 218 கிலோ ஹெராயின் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 1,526 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இரண்டு படகுகளிலும் 20 மீனவர்கள் இருந்திருக்கின்றனர். அதில் 4 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், 16 பேர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மீன் பதப்படுத்தி வைக்கும் அண்டர்கிரவுண்ட் ஸ்டோரேஜில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெராயின்

2 மீன்பிடி படகுகள், ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 20 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஹெராயின் போதைப்பொருள் இரண்டு நாள்களுக்கு முன்பு பிடிக்கப்பட்டதாகவும், இன்று கொச்சி கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹெராயினை மீனவர்களுக்கு கொடுத்தது யார்… அவர்கள் இதை எங்கு கொண்டுபோய் சேர்க்கிறார்கள் என்பது குறித்து டைரக்டர் ஆஃப் ரெவன்யூ இண்டலிஜன்ஸ் மற்றும் கோஸ்ட் காட் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.