டாடாவுக்கு ஏன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடமில்லை?

இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா பலராலும் விரும்பப்படும் நபர்களில் ஒருவர். வசதி படைத்த நபர்களைச் சாட வேண்டும் என்றால் `இவரு பெரிய டாடா , பிர்லா’ எனக் கூறுவது வழக்கம். அப்படி பட்டிதொட்டி எங்கும் நிறைந்து கிடக்கும் டாடாவின் புகழ், அவரது தொலைநோக்கு வணிகப் பார்வையாலும், அவர் தொழிலதிபர் என்பதாலும் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த மனிதநேயவாதி என்கின்றன பத்திரிகைகள். அப்படி என்னதான் செய்துவிட்டார் டாடா?

84 வயதாகும் ரத்தன் டாடா எந்தவொரு புகழ்போதைக்கும் அடிமையானவர் இல்லை. சமீபத்தில்கூட அவர் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார்.

ரத்தன் டாடா

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ரத்தன் டாடாவைவிட 432 இந்தியர்கள் பணக்காரர்களாக உள்ளனர். கிராமம்தோறும் சென்றடைந்த டாடாவால் முதல் 10 இடத்தை இந்தியப் பணக்காரர்கள் வரிசையில்கூட பிடிக்க முடியவில்லையா எனத் தோன்றலாம். ஆனால், இவர்களைவிடவும் ரத்தன் டாடா மனதளவில் பணக்காரர் என்றே சொல்லலாம். டாடா டிரஸ்ட் மூலம் அவர் செய்துவரும் தொண்டுகளால் சொத்துகள் எதையும் பணக்காரர் பட்டியலில் இடம்பெற சேர்த்து வைக்கவில்லை போலும்.

2021-ம் ஆண்டு நிலவரப்படி, 103 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது டாடா குழுமம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய குழுக்களில் ஒன்றாக உள்ளது. இதன் வருவாயில் 66% டாடா டிரஸ்ட்டுக்கே சென்றடைகின்றன.

கடந்த ஒன்றரை வருடங்களாக ரத்தன் டாடா, இந்தியாவின் அவசரத் தேவைக்காக உதவி வருகிறார். சுகாதார வசதிகள், கல்வி முறையை மேம்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் வழியில்தான் அவர் குடும்பமும் செயல்படுகிறது. அதனால் அவர் தனிப்பட்ட நிதிநிலையில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ரத்தன் டாடா

எந்த ஒரு தொழிலதிபருக்கும் இருக்கும் ஆசை, பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்பதுதான். ஆனால், டாடா அந்த ரேஸில் தன்னை ஒருபோதும் இணைத்துக் கொள்ளவில்லை.

டாடா குழுமம் உலோகங்கள் மற்றும் சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, வாகனம், ரசாயனங்கள், போக்குவரத்து எனக் கிட்டத்தட்ட 29 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் மேலும் பட்டியலிடப்படாத நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

இத்தனை நிறுவனங்கள் இருந்தபோதிலும் டாடா இவற்றில் சில நிறுவனங்களின் பங்குகளை அனுபவித்தது கிடையாது. நேரடியாக டாடா அறக்கட்டளைக்கு சேரும்படிதான் கட்டமைத்துள்ளார். பில் கேட்ஸுக்கு முன்னதாகவே டாடா கவனிக்கத்தக்க கொடையாளர் (philanthropist0 ஆக இருந்திருக்கிறார். தன்னால் ஆன உதவிகளை எல்லா காலகட்டத்திலும் சமூகத்துக்குச் செய்து வந்தவர் ரத்தன் டாடா.

அந்தவகையில் பெரும் பணக்கார்கள் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், டாடா இதயங்களை வென்ற பணக்காரர்தானே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.