பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டு உள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்த நடைமுறை, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கும் உள்ளூர் வரிகளும் (
மதிப்பு கூட்டு வரி
) பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

நேற்று, மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 8 ரூபாய் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அடுத்து, முதல் மாநிலமாக கேரள அரசு, பெட்ரோல் மீதான வாட் வரியை 2.41 ரூபாயும் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 1.36 ரூபாயும் குறைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரள மாநிலத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் மீதான வரியில் 2.48 ரூபாயும், டீசல் மீதான வரியில் 1.16 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.48 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.16 குறைந்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, கேரளா மற்றும் ராஜஸ்தான் அரசுகளை பின்பற்றி மேலும் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.