கவுகாத்தி : அசாமில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், பல மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் தங்களின் உடைமைகளை இழந்த 500க்கும் அதிகமான குடும்பங்கள், ரயில் தண்டவாளங்களில் தங்கியுள்ளன.வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
தற்காலிக கூடாரம்
இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ௩௨ மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, 3,246 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இரண்டு கிராமங்களில் வசிக்கும் ௫௦௦க்கும் அதிகமான குடும்பங்கள், வெள்ளத்தில் தங்கள் உடைமைகளை இழந்து, மேடான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளன.வெள்ளம் காரணமாக, அசாமில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி ஒன்பது பேர், நிலச்சரிவுகளில் சிக்கி ஐந்து பேர் என மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ராணுவம், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படையின் வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிப்பு
மழை நீடித்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.
கேரளாவில் தொடரும் கன மழை
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் கேரளாவிலும், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட ௧௧ மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ௧௧ செ.மீ., அளவுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி, பாம்பலா அணைகள் நிரம்பியதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப் படுகிறது.
Advertisement