அரசு சான்றிதழ்கள் அனைத்தையும் வாட்ஸ் ஆப்பில் சேகரிக்கலாம்!| Dinamalar

புதுடில்லி : கல்வி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும், ‘வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக, ‘டிஜிட்டல்’ வடிவில் பெறும் வசதியை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, ‘டிஜிட்டல்’ வடிவில் சேகரிக்க, ‘டிஜிலாக்கர்’ என்ற, ‘மொபைல் போன்’ செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ‘இனி, இந்த செயலியில் கிடைக்கும் சேவைகள் அனைத்தையும், மக்கள் வாட்ஸ் ஆப் வாயிலாக பெற முடியும்’ என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கை:- சீரான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசின் சேவைகள் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ‘டிஜிலாக்கர்’செயலியில், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விதமான சான்றிதழ்களையும், டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்க முடியும்.

இனி, இந்த சேவைகள் அனைத்தும், வாட்ஸ் ஆப் வாயிலாக வழங்கப்பட உள்ளது. இந்த சேவைகளை பெற, 90131 51515 என்ற எண்ணுக்கு, ‘Hi’ என, ‘மெசேஜ்’அனுப்ப வேண்டும். இதையடுத்து, வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, அனைத்து ஆவணங்களையும் மக்கள் பெற முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை வாட்ஸ் ஆப் வாயிலாக பெற, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்த எண்ணில், புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.