டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி வித்தியாசமான உலக சாதனை

மிர்புர்,

இலங்கை- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய நிலையில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும் (135 ரன்), முஷ்பிகுர் ரஹிமும் (115 ரன்) சதம் அடித்து அணியை காப்பாற்றினர். தொடக்க நாளில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. லிட்டான் தாஸ் 141 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 175 ரன்களுடன் களத்தில் இருந்தார். இவர்கள் கூட்டாக திரட்டிய 272 ரன்கள், 6-வது விக்கெட்டுக்கு வங்காளதேச ஜோடியின் அதிகபட்சமாகும். 25 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து

அதன் பிறகு ஒரு அணி 300 ரன்களை தாண்டியது இதுவே முதல் நிகழ்வாகும். அத்துடன் இன்னொரு வித்தியாசமான சாதனையும் வங்காளதேசம் வசம் ஆனது. அந்த அணியில் தமிம் இக்பால், ஹசன்ராய் உள்பட 6 வீரர்கள் ரன் ஏதுமின்றி டக்-அவுட் ஆனார்கள். 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் அடித்து, 6 வீரர்கள் டக்-அவுட் ஆனது இதுவே முதல்முறையாகும்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடா பெர்னாண்டோ (57 ரன்), கேப்டன் திமுத் கருணாரத்னே (70 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.