தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ம் தேதி வெளியிடுவோம் – அண்ணாமலை பேச்சு

திருப்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தற்போது மத்திய மந்திரியாக உள்ள முருகன் கடுமையாக உழைத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் 3 இலாகாக்களை கொடுத்து அழகு பார்த்துள்ளது. இதனால் தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க. தமிழகத்தில் மாற்றத்திற்கான முன்னேற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட எந்த ஒரு மந்திரி மீதும் சிறிதளவு கூட குறைசொல்ல முடியாது. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றனர். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். 
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம். வரும் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சட்டமன்றத்திற்கு பா.ஜ.க. சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் செல்வார்கள் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.